செல்லும் வழி
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரிமளம், புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையில் இருந்து தேனிப்பட்டி ரோட்டில் 18 கி.மீ.,. பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது.
கோயில் பெருமைகள்
அம்பு பிடிக்கும் பக்தர்கள்: அரிமளத்திலுள்ள பொற்குடை பகுதி மைதானத்துக்கு நவராத்திரி விழாவில் விஜயதசமி அன்று பரிவேட்டைக்காக, மீனாட்சியம்மன், ஸ்ரீநிவாசபெருமாள், அய்யனார், மாரியம்மன், ஜெயவிளங்கி அம்மன், பால் அடையார், சுப்பிரமணியர் ஆகியோர் அம்பு போடுவதற்காக வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏழு சுவாமிகளும் மைதானத்தில் எழுந்தருளியவுடன் தீபாராதனை நடந்து சுவாமிகள் அம்பு போடத் துவங்குகின்றன. இந்த அம்பை வீட்டுக்கு கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர். இதனால் நாம் நினைத்த செயலை அம்பு போல் அடைந்துவிடலாம் என்பது நம்பிக்கை.
சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில், தீர்த்தம் அமைந்துள்ளது. சித்திரைத் திருவிழாவில் 11ம் திருநாளில் இதில் தெப்பத் திருவிழா நடக்கிறது. கிரகரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது. ஆனால், அவ்வாறு தத்து கொடுக்கும் நபருக்கு வேறு கோயிலில் வேண்டுதல் எதுவும் பாக்கி இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்த நேர்ச்சைகளை நிறைவேற்றிவிட்டு இங்கு வந்து தத்து கொடுக்க வேண்டும். இவ்வகையில், இந்த சுந்தரேஸ்வரர், இறைவனுக்கு கூட கடனைத் தீர்த்தவராகக் கருதப்படுகிறார். சுத்த சாசன கிரயமாக என்னுடைய குழந்தையை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தத்து கொடுக்கிறேன், இனி இது என்னுடைய குழந்தையில்லை. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் குழந்தை, என்று கூறி, கண்ணீர் மல்க பெற்றோர் தங்கள் குழந்தையை அர்ச்சகரிடம் ஒப்படைக்கின்றனர். அர்ச்சகர் அந்தக் குழந்தையை தாய்மாமா அல்லது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கிறார். குழந்தையின் திருமணத்தின் போது பெற்றோர் கோயிலுக்கு மீண்டும் சென்று சுவாமியிடம், என்னுடைய குழந்தையை சுவாமிக்கு தத்து கொடுத்ததாக கூறிய என்னுடைய வாக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி, குழந்தையின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து செல்கின்றனர்.
ஊர் பெயர்க்காரணம்: அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை. முழு நிலவாக இருந்த சந்திரன் தனக்கேற்பட்ட சாபத்தால், குழந்தை போல் சிறுவடிவாகி குறுகி கொண்டே வந்தார். அனைத்து கலைகளையும் இழந்தார். வில்வமரம் அடர்ந்த பகுதியான அரிமளம் வந்தார். அவரைக் காப்பாற்றும் வகையில், இறைவன் அவரைத் தன் தலைமீது சூடிக் கொண்டார். சாபமும் நீங்கியது. சுந்தரேசப் பெருமானின் திருவருளால், அவருடைய சடைமுடியில் இளம்பிறையாகி (அரிமளமாகி) சந்திரன் அமர்ந்தார். அண்ணலே! தங்கள் திருவருளால் அடியேன் இழந்த கலைகளை இங்கு பெற்றேன், இதனால் இவ்வூர் அரிமளம் என்ற பெயரால் அழைக்க அருள்புரிய வேண்டும், என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமானும் அவ்வாறே அருள்புரிந்ததால் அரிமளம் என்ற பெயர் ஏற்பட்டது. அரும்பள்ளம் என்ற சொல்லே மருவி அரிமளம் என்று ஆயிருக்கலாம் என்றும், இங்குள்ள விளங்கியம்மன் சன்னதியில் ஏரழிஞ்சிப்பழம் என்ற அரிய வகை காணப்பட்டதால் அரும்பழம் என்று பெயர் ஏற்பட்டு அரிமளம் என்று சுருங்கியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிறப்புகள்
சித்திரையில் நடைபெறும் தெப்பத் திருவிழா
மார்ச் 19ல் இருந்து 21 வரை சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டு பிரகாசிக்கும்.
கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது